இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 19, 2011

செப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி



சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள். அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த கர்ணன். அவர் கூறியதாவது: 5ம் வகுப்பு வரை தான் படித்தேன். 15 வயதில் சென்னையில் ஒரு காலணி தயாரிக்கும்  நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு தொழிலை கற்றுக்கொண்டேன். உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு கிராக்கி இருப்பதை அறிந்து, அதை தயாரிக்க தொடங்கினேன்.

பல்வேறு மருத்துவமனைகளை அணுகி எனது முகவரியை கொடுத்தேன். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எனக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த தொழில் எளிதானது. சிறிய முதலீட்டில் துவங்க ரூ.40 ஆயிரம் போதும். இயந்திரங்கள் பொருத்தி பெரிய அளவில் துவங்க ரூ.3 லட்சம் தேவை. மருத்துவமனைகளில் டிஸ்பிளே செய்து ஆர்டர் பிடிக்கலாம். மருத்துவமனை ஸ்டோர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்கலாம்.

மருத்துவமனை அனுமதி பெற்று உள் நோயாளிகளிடம் நேரில் விற்கலாம். இந்த செருப்புகளை நோயாளிகள் மட்டுமல்ல; மற்றவர்களும் பயன்படுத்தலாம். செருப்பு கடைகளிலும் விற்கலாம். ஆர்டர் குறைவாக இருக்கும் போது மற்ற செருப்புகளையும் தயாரித்தால் லாபம் பெருகும்.

தேவையான பொருட்கள்

செருப்பின் அடிப்பாகத்துக்கு தேவையான ரப்பர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.450) அடிப்பாகத்தின் மேல் அடுக்காக பயன்படும் பாலிமர் கவர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.150), செருப்பின் ஸ்டிராப் செய்ய சிந்தடிக் ஷீட் (ஒரு ஷீட் ரூ.280) ஸ்டிராப்களை இணைக்கும் வெல் க்ரோவ் (மீட்டர் ரூ.30) செருப்பின் முன்பாகத்தில் மட்டும் ஒட்டும் ரப்பர்  பீடிங் பன்வர் (ஒரு ஷீட் 800), பசை, நூல்.

கட்டமைப்பு: 10க்கு 16 அடி நீள, அகலம் கொண்ட இடம் போதுமானது.

கிடைக்கும் இடங்கள்

காலணி தயாரிக்க தேவையான பொருட்கள் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கிடைக்கின்றன.

பயன்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது. காயம் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயளிகள் காலில் காயம் ஏற்படாமல் இருக்க பீடிங் பன்வர் பொருத்திய காலணிகள் உதவியாக இருக்கின்றன. எதன் மீதாவது மோதினால் காலில் அடிபடாமல் இவை காக்கின்றன.பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சையில் உள்ளவர்களின் பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் நல்லது. இதை அணிய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் இல்லை. கூலியாட்கள் வைத்து உற்பத்தியை அதிகமாக்கினால் வருவாய் பெருகும்.

முதலீடு

இட வாடகை அட்வான்ஸ்
ரூ.10 ஆயிரம், தையல் மெஷின்
(ரூ.6 ஆயிரம்), அலமாரி 2
(ரூ.8 ஆயிரம்), மரத்தால் ஆன
மாதிரி கால் 12 வகை அளவுகள், கொட்டல் 1, உளி 1,
கத்தரிக்கோல் 3, பல்வேறு
பாத அளவுகளை கொண்ட சார்ட்
ஆகிய மூலதன பொருட்கள் (ரூ.7 ஆயிரம்). மொத்த முதலீடு  ரூ.31 ஆயிரம்.

உற்பத்தி செலவு

அறை வாடகை ரூ.3 ஆயிரம், மின் கட்டணம் ரூ.300, ஒரு நாளில் ஒரு நபர் 4 ஜோடி காலணிகள் தயாரிக்கலாம். மாதம் 25 நாளில் ஆண்களுக்கான காலணி 100 ஜோடி அல்லது பெண்களுக்கான காலணி 150 ஜோடி தயாரிக்கலாம். ஆண்கள் காலணி ஒன்று தயாரிக்க உற்பத்தி பொருள் மற்றும் உழைப்பு கூலி உள்பட ரூ.150 செலவாகும். பெண்கள் காலணி தயாரிக்க ரூ.100 செலவாகும். எந்த செருப்பு தயாரித்தாலும் ரூ.15 ஆயிரம் தேவை. மொத்த மாத செலவு
ரூ.18,300.

வருவாய்

ஆண்கள் காலணி குறைந்தபட்சம் ரூ.250க்கும், பெண்கள் காலணி ரூ.170க்கும் விற்கிறது. மாத வருவாய் ரூ.25 ஆயிரம். செலவு ரூ.18,300.
லாபம் ரூ.6,700. ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு தொழிலை விரிவுபடுத்தினால் அதிக லாபம் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

ரப்பர்ஷீட், பாலிமர் கவர் ஷீட் ஆகியவற்றில் தேவைப்பட்ட அளவில் அடிப்பாகத்தை வரைந்து, வெட்டி எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக ஒட்ட வேண்டும். இப்போது அடிப்பாகம் தயார். சிந்தடிக் ஷீட்டில் காலணியின் மாடலுக்கேற்ப இருபுற ஸ்டிராப்களை வெட்டி எடுக்க வேண்டும். அதை தையல் மெஷினில் வைத்து தைக்க வேண்டும். இப்போது மேல்பாகம் தயார். இதை அடிப்பாகத்தில் இணைக்க வேண்டும்.

அதற்கு அடிப்பாகத்தின் 2 அடுக்குகளுக்கு இடையில் பிளவு ஏற்படுத்தி உள்ளே பசை தடவி மேல் பாகத்தை திணித்து இறுக்க வேண்டும். பின்னர் காலணியின் முன்பாகத்தில் மட்டும் கீழ்பாகத்தின் 2 அடுக்குகளை இணைக்கும் இடத்தில் பீடிங் பன்வர் ஒட்டவேண்டும். கடைசியாக செருப்பின் மேல்பாகத் தில் வெல்க்ரோவ் ஒட்ட வேண்டும்.

பயிற்சி பெற...

டிப்ளமா இன் லெதர் டெக்னாலஜி படிப்பு உள்ளது. இதன் மூலம் தோல் பதப்படுத்துதல், காலணி தயாரிப்பு ஆகியவற்றை கற்று கொள்ளலாம். அல்லது காலணி உற்பத்தி கூடங்களில் 3 மாதத்தில் அனுபவ ரீதியாக கற்று கொள்ளலாம்.



புதுடில்லி: வரும், 2015ல், உள்நாட்டில், காலணிகள் துறையின் சந்தை மதிப்பு, 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது, 22 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.உயர்தர காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், நாட்டின் சிறிய, நடுத்தர நகரங்களை மையமாக வைத்து, விற்பனையில் ஈடுபட்டுள்ளன. நாட்டில், விற்பனையாகும் மொத்த காலணிகளில், இந்நகரங்களின் பங்களிப்பு, 55 சதவீதம் என்றளவில் உள்ளது.மொத்த காலணிகள் சந்தையில், ஆடவர்களுக்கான பிரிவு, 55 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இவை தவிர, குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சந்தை பங்களிப்பு முறையே, 15 மற்றும் 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், காலணிகள் தயாரிப்பில், அமைப்பு சாராத நிறுவனங்களின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இவற்றில், 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், எஞ்சிய 30 சதவீதம் (5 லட்சம் வேலைவாய்ப்பு) பங்களிப்பை கொண்டுள்ளன.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites