இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

எரிகட்டி தயாரித்தால்

பெரிய தொழிற்சாலைகளில் இருக்கும் பாய்லர்களை இயக்க விறகுகள் எரிக்கப்படுகின்றன. விறகுகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதோடு விலையும் அதிகமாக இருப்பதால், விறகுகளுக்கு மாற்றாக மரக்கழிவு எரிகட்டிகளை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. பயன்பாடு அதிகளவில் இருப்பதால், மரக்கழிவு எரிகட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம், எரிகட்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகள் மிகக் குறைவாகவே இருப்பதால் அதிக போட்டி இருக்காது என்கிறார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பார்த்திபன் அவர் கூறியதாவது: தமிழகத்தில் காகித ஆலைகள் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு மரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதே தேவை தொடர்ந்தால், வரும் 5 ஆண்டுகளில் எரிப்பதற்கு மரம் கிடைக்காது. அப்போது மரக்கழிவு எரிகட்டியே தொழிற்சாலை பாய்லர்களுக்கு முக்கிய எரிபொருளாக அமையும்.

விறகுக்கு கிராக்கி உள்ளதால், தற்போது பல ஆலைகள் எரிகட்டியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சம் 30 எரிகட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. இவை ஆயிரத்துக்கு மேல் பெருகினாலும் எரிகட்டி உற்பத்தி போதுமானதாக இருக்காது. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிரந்தர லாபம் பார்க்கலாம். எரிகட்டி உற்பத்தியை ஊக்குவிக்க வனத்துறை சார்பில் தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி வளாகத்தில் எரிகட்டி உற்பத்தி பயிற்சி மையத்தை 3 மாதம் முன்பு துவக்கினோம். இலவச ஒரு நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறோம். 250 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். பயிற்சி பெற்றவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க வங்கி மற்றும் அரசு அதிகாரி களுடன் பேசி வருகிறோம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் விறகுகள் ஒரு டன் பயன்படுத்தினால் கிடைக்கும் வெப்பம், எரிகட்டியில் முக்கால் டன் பயன்படுத்தினாலே கிடைத்துவிடும். எரிகட்டியின் விலை குறைவாக உள்ளதால், தொழிற்சாலைகள் எரிகட்டி பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. சந்தை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளது.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

எங்கு கிடைக்கும்?

எரிகட்டி தயாரிக்க தேவையான மரக்கழிவுகள், மரங்கள் வெட்டி விற்கும் விவசாயிகளிடமும், புளியம்பழம், கடலைத் தோல் ஆகியவை புளி, கடலை உற்பத்தி இடங்களிலும், டீ, காபித்தூள் கழிவுகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், மரத்தூள் மர அரவை மில்களிலும் கிடைக்கும். இலை, தழை போன்றவற்றை கிடைக்கும் இடங்களில் பெறலாம். கிரைண்டர், டிரையர் உள்ளிட்ட எரிகட்டி தயாரிப்பு இயந்திரங்கள் கோவையிலும், குஜராத்திலும் கிடைக்கிறது. எரிகட்டி தயாரிப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைக்கு கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.

முதலீடு

குறைந்தபட்சம் அரை ஏக்கர், அதிகபட்சம் முக்கால் ஏக்கர் இடம். 2 செட்டுகள் போட வேண்டும். மணிக்கு 250 கிலோ உற்பத்தி செய்யும் எரிகட்டி தயாரிப்பு இயந்திரம் 7.5 லட்சம், 1.5 டன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ரூ. 18 லட்சம். கிரைண்டர் இயந்திரம் ரூ. 3 லட்சம். டிரையர் ரூ. 5 லட்சம். தினசரி 5 டன் உற்பத்தி வீதம், மாதம் 30 நாளில் 150 டன் எரிகட்டி தயாரிக்கலாம். இதை உற்பத்தி செய்ய 200 டன் மரக்கழிவுகள் தேவை. மரக்கழிவுகள் டன் ரூ. 1200 முதல் ரூ. 1750 வரை விற்கிறது. அதிகபட்ச விலை ரூ. 1700 என்றால் 200 டன்னுக்கு 3.4 லட்சம் தேவை. ஒரு டன் உற்பத்தி செய்ய ஆள் கூலி, மின்சாரம், இயந்திர தேய்மானம், இட வாடகை ஆகியவற்றுக்கு ரூ. 600 செலவாகும். மாதம் 150 டன்னுக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. உற்பத்தி முதலீட்டிற்கு மாதம் ரூ. 4.30 லட்சம் ஆகிறது.

மாதம் ரூ. 2 லட்சம் லாபம்

உற்பத்தி செய்யப்படும் எரிகட்டி டன் ரூ. 3800 முதல் ரூ. 4200 வரை விற்கிறது. இதன் மூலம் 150 டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 5.7 லட்சம், அதிகபட்சம் ரூ. 6.3 லட்சம் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதத்துக்கு குறைந்தபட்ச லாபம் ரூ. 1.4 லட்சம், அதிகபட்சம் ரூ. 2 லட்சம். கொள்முதல் செய்யப்படும் மரக்கழிவுகளின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப லாபம் இருக்கும்

தயாரிக்கும் முறை

மரக்கழிவுகளான இலை, கிளை, கொப்புகள், புளியம்பழத்தின் தோல், கடலைத்தோல் உள்ளிட்ட தானிய அரவை கழிவுகள், காபி, டீ தூள் கழிவுகள், அரவை மில்களில் வீணாகும் மரத்தூள் என தாவர கழிவுகள் எதுவாக இருந்தாலும் எரிகட்டி தயாரிக்க பயன்படுத்தலாம். முதலில் அவற்றை எரிகட்டி தயாரிப்பு இயந்திரத்தில் உள்ள கிரைண்டரில் அரைத்து தூளாக்க வேண்டும். தூளில் உள்ள ஈரப்பதத்தை சோதிக்க வேண்டும். 10 முதல் 12 சதவீதத்துக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால், தூளை டிரையர் மெஷினில் போட்டு, ஈரப்பதத்தை 10 முதல் 12 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும். வெயிலில் போட்டும் உலர்த்தலாம்.

பின்னர் தூளை இயந்திரத்தில் கொட்டினால், அவை மரத்துண்டு வடிவத்திலான குழாயில் சேரும். அங்கு 80 முதல் 100 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும். குழாயில் தூள் சேர்ந்தவுடன் இரும்பு பிஸ்டன், தூளை இடித்து இறுக்கும். அவை மரத்துண்டுகளைப் போல் கெட்டியாகி வெளியேறும்.  மணிக்கு 250 கிலோ முதல் 1.5 டன் வரை எரிகட்டி உற்பத்தி செய்யலாம். மணிக்கு 250 கிலோ, 500 கிலோ, ஒரு டன், 1.5 டன் வரை எரிகட்டி தயாரிக்க தனித்தனியாக இயந்திரங்கள் உள்ளன. இயந்திரத்துக்கு ஏற்றவாறு உற்பத்தி இருக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites