இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

டெரகோட்டா பொம்மையில் பணம் அள்ளலாம்

இயற்கையில் கிடைத்த மண்ணை பிசைந்து பல வடிவங்களில் பாண்டங்கள், சாமி சிலைகள், ஆயுதங்கள் என விருப்பப்பட்டதை படைத்தான் அந்தக்கால மனிதன். பஞ்சபூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலந்த ஒரு கலை இந்த மண்பாண்டக்கலை என்கிறார்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள். புதுவை வில்லியனூர் பகுதி மண்பாண்டத்தொழிலுக்கு பெயர் பெற்றது. இப்போது அது புதிய வடிவம் எடுத்து டெரகோட்டா என்ற பெயரில் சக்கை போடு போடுகிறது.

இத்தொழிலில் பிரபலமானவர் கணுவாய்பேட்டையைச்சேர்ந்த வி.கே.முனுசாமி. 43 வயதாகும் இவர் ஏழு வயதில் இருந்தே இத்தொழிலில் இருக்கிறார். இப்போது பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். யுனெஸ்கோ விருது,தேசிய விருது, மாநில அரசு விருது, கலைமாமணி விருது போன்றவைகளும் இவருக்கு பெருமை சேர்க்கின்றன.

தனது தொழில் அனுபவம் குறித்து வி.கே.முனுசாமி கூறியதாவது: நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். எனது தந்தை வி.கிருஷ்ணபத்தர் மண்பாண்டங்கள் செய்வதில் திறமையானவர். சிறு வயதிலேயே மண்பாண்டங்கள், சாமி சிலைகளை விளையாட்டாக செய்து பழகினேன். பின்னர் முறைப்படி என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்களுக்கு கிராக்கி அதிகரிக்கவே அவற்றை செய்வதில் ஈடுபாடு காட்டினேன்.

1990ம் ஆண்டு ஓம் சக்தி பைன் ஆர்ட்ஸ் அண்டு டெரகோட்டா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஏராளமானோருக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று தனியாக தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி ஆற்றங்கரையில் கிடைக்கும் ஒருவித களிமண் இந்த டெரகோட்டா பொம்மைகள் செய்ய ஏற்றது. எந்த வடிவத்தை செய்தாலும் அச்சு பிசகாமல் வளைந்து கொடுக்கும். வெடிப்பு வராது, நாம் நினைத்த வடிவம் கிடைக்கும். இந்த மண்ணை வடிகட்டினால் கிடைக்கும் களிமண்ணைக்கொண்டு சிறிய பொம்மைகள், அலங்கார பொருட்கள், மணிகள் போன்றவற்றை செய்யலாம். மீதமுள்ள மண்ணில் வைக்கோல் கூளம், யானை சாணம் போன்றவற்றை கலந்து பிசைந்து ஒரு அடி முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். மேலும் வில்லியனூர் டெரகோட்டாவுக்கு புவி குறியீடு பெற்றுள்ளோம்.  உலக அளவில் இந்த பொருட்களுக்கு மரியாதை உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த டெரகோட்டா பொம்மைகள் மிகவும் கவர்ந்திழுக்கின்றன. பெரிய ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், ரிசார்ட்ஸ் போன்ற இடங்களில் இந்த டெரகோட்டா பொம்மைகளுக்கு நல்ல மவுசு உண்டு. இங்கு வைப்பதற்கென்றே பெரிய ஜாடிகள், உருளிகள் (தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைப்பது) போன்றவற்றை பல வடிவங்களில் வேலைப்பாடுகளுடன் செய்து தருகிறோம். நமது நாட்டிலும் இப்போது இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது. மத்திய அரசின் கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையம் ஏராளமானோருக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. ஏராளமான வெளிநாடுகளுக்கு இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கிறது.

தாய்லாந்து, வியட்னாமைப்போல புதுவையிலும் கைவினை கிராமம் கண்டிப்பாக தேவை. இதன்மூலம் ஏராளமான கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சந்தை வாய்ப்பு கிடைக்கும். இங்கு காட்சி மையம் ஒன்றும் வைத்து விட்டால் இத்தொழில் மேலும் பிரபலமடையும்.  இதற்கு மூலதனம் தேவையில்லை, மூளைத்தனம் இருந்தால் போதும். அதே நேரம் பெரிய அளவில் தொழிலாக செய்தால் ஏராளமானோருக்கு வேலை கொடுக்கலாம்.

லட்சக்கணக்கில் வருமானமும் ஈட்டலாம். மாதம் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் பெறமுடியும். மொத்தத்தில் நம் தமிழர்களுக்கே உரிய இந்த கைவினைக்கலையை அழிந்து விடாமல் பாதுகாக்கும் சக்தி இளைய சமுதாயத்திடம் உள்ளது. அதனை பொறுப்புடன் உணர்ந்து செயல்பட்டால் டெரகோட்டா கலை மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவ்வாறு முனுசாமி கூறினார்.

செய்வது எப்படி?

டெரகோட்டா பொம்மைகள் செய்வதற்கு தேவை நல்ல களிமண். ஆறு, ஏரி, குளக்கரைகளில் இது கிடைக்கும். வில்லியனூரை பொறுத்தவரை சங்கராபரணி ஆற்றங்கரையில் நல்ல களிமண் கிடைக்கிறது. இந்த களிமண்ணை எடுத்து வெயிலில் உலர வைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதனை எடுத்து பிசைந்து கையாலும், எந்திரத்தாலும் நாம் விரும்பும் வடிவ பொருட்களை செய்யலாம்.

சிறிய பொருட்களை கையால் செய்யலாம். பெரிய சிலைகள், பொம்மைகள் போன்றவை எந்திரத்தில் செய்யலாம். கிராம தேவதைகள், விலங்குகள், பறவைகள், அய்யனார், குதிரை, யானை போன்றவற்றை தற்போது மிகவும் கலை நுட்பத்துடன் தயாரிக்கின்றன. அரை அங்குலம் முதல் 32 அடி உயரம் வரை  சிற்பங்கள் செய்யப்படுகிறது.

களிமண்ணால் செய்தபின்னர் அவற்றை காயவைத்து பின்னர் சூளையில் வைத்து சுட வேண்டும். நன்றாக வெந்தபிறகு சிலைகள், பொருட்கள் தயாராகி விடும். இவற்றுக்கு இயற்கை வண்ணம் (இளஞ்சிவப்பு நிறம்) பூசி விற்பனைக்கு அனுப்பலாம்.

இன்வெஸ்ட்மென்ட்

இதற்கு பெரிய முதலீடு வேண்டாம். வீட்டிலேயே செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை போட்டு தொழில் தொடங்கலாம்.  20க்கு 40 அடி அளவுள்ள கொட்டகை இருந்தால் சிறிய அளவில் தொழில் தொடங்கலாம். இங்கு களிமண், பதப்படுத்தும் இடம், மோல்டிங், பினிஷிங், பயரிங் (சூளை), பேக்கிங், விற்பனை, காட்சியகம் போன்றவை இருக்க வேண்டும்.

60க்கு 180 அளவு கொண்ட கொட்டகை அமைத்தால் பெரிய அளவில் செய்ய முடியும். தற்போது விறகு சூளைக்கு பதிலாக கேஸ் மூலம் எரியும் அடுப்பும் வந்து விட்டது. மழைக்காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான பயிற்சி இல்லாதவர்கள் கூட வீட்டுவேலைநேரம் போக மற்ற நேரத்தில் அகல்விளக்கு அச்சு வாங்கி வந்து அகல்விளக்கு செய்து ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வருமானம் பெறலாம். நல்ல கற்பனைத்திறன், பொறுமை, அழகியல் ரசனை இவை இருந்தால் இந்த தொழிலில் நீங்கள்தான் ராஜா

உதவித்தொகையுடன் பயிற்சி

இந்த தொழிலுக்கு மாவட்ட தொழில் மையம் உதவித்தொகையுடன் பயிற்சியும் அளிக்கிறது.8 ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலங்களில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் உண்டு. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ), ஆதிதிராவிடர் நலத்துறை (ஒரு வருடம்), மகளிர் மேம்பாட்டுக்கழகம் (மகளிருக்கு மட்டும்) ஆகியவையும் பயிற்சி அளிக்கின்றன. மகளிர் மேம்பாட்டுக்கழகம் 3 முதல் 6 மாத பயிற்சி அளிக்கிறது.

மத்திய அரசின் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் 14 வயது நிரம்பியவர்களுக்கு இத்தொழில் குறித்து 1500 ரூபாய் உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு அட்வான்ஸ் டிரைனிங் (குரு சிஷ்யா பரம்பரா திட்டம்) 6 மாதம் அளிக்கப்படுகிறது. இதில் மாதாமாதம் 2 ஆயிரம் உதவித்தொகையும் உண்டு.

அடுத்த ஆண்டு 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவிகளும் இலவசம். தனியார் அமைப்புகள், கல்லூரிகள், என்ஜிஓ அமைப்புகள் ஆகியவை இதனை எடுத்துச்செய்யலாம்.

சந்தை வாய்ப்பு

பயிற்சி முடித்தவுடன் நாம் செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும் மாவட்ட தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது. மாநில, தேசிய மற்றும் உலக வர்த்தக கண்காட்சி போன்றவற்றுக்கு அழைத்துச்செல்கிறது. போக்குவரத்து செலவும் அளிக்கின்றனர். இதன்மூலம் நாம் தனிப்பட்ட முறையிலும் விற்பனை வாய்ப்பை பெற முடியும்.

மத்திய அரசு கைவினை அபிவிருத்தி ஆணையம் மூலம் கிராப்ட் பஜார், காந்தி சில்ப் பஜார், டெல்லி ஹாட் போன்ற கண்காட்சிகளிலும் பங்கு பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டில் நடக்கும் கண்காட்சிகளிலும் நாம் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும். இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது.

சிறப்புகள்

டெரகோட்டா பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையோடு ஒன்றிணைந்து இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. உடைந்து போனால் கூட அவற்றை தூர எறிந்து விட்டு புதியதை வைத்துக்கொள்ளலாம். விலையும் குறைவு. மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும்.

நீண்டநேரமானாலும் கெட்டுப்போகாது. மண்பானை நீரை குடித்தால் உடலுக்கு நல்லது. தற்போது தேனீர் கோப்பைகள், ஐஸ் கிரீம் கப்புகள் கூட மண்பாண்டங்களில் செய்கிறார்கள். டெரகோட்டா பொம்மைகள், அலங்கார பொருட்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டு வாசல் மற்றும் பூஜை அறைகளில் தண்ணீர் நிரப்பி பூக்களை போட்டு வைக்கும் உருளிகள் வாஸ்து குணம் கொண்டவை. இவ்வாறு பல சிறப்புகள் உள்ளன.

என்னென்ன செய்யலாம்?

டெரகோட்டா பொம்மைகளை பொறுத்தவரை அரை அங்குல விநாயகர் சிலை முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். சிறிய விநாயகர் பொம்மைகள், குபேரன் சிலை, யானை, குதிரை போன்ற விலங்குகள் சிலைகள், அலங்கார விளக்குகள், உருளிகள், தொங்கும் விளக்குகள், அகல் விளக்குகள், மனித உருவங்கள், சுவற்றில் செய்யும் உருவங்கள், ஆபரணங்கள், டைல்ஸ், டிசைன்கள், தொங்கும் மணிகள், வாஸ்து மணி, அலங்கார மணி, செராமிக் பொம்மைகள் இன்னும் ஏராளமான பொருட்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் செய்யலாம்.

1 comments:

அய்யா முனுசாமியின் முகவரி அல்லது தொலைபேசி எண் வேண்டும்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites