இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 19, 2012

வஞ்சனையில்லாம வருமானம் தருது வான்கோழி

தீவனப்பயிர் சாகுபடிக்கோ அல்லது மேய்ச்சலுக்கோ தனியாக நிலம் இருந்தால் மட்டுமேதான் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வணிக ரீதியாக வளர்க்க முடியும். அப்படியெல்லாம் நிலம் இல்லாதவர்களுக்கு கை கொடுப்பது... வான்கோழி, நாட்டுக்கோழி, காடை போன்ற பறவைகள்தான். அதிலும் ஏற்கெனவே ஏதாவது உபயோகத்துக்காக கிடக்கும் இடத்தை வைத்துக் கொண்டே இத்தகையப் பறவைகளை வளர்த்து, கூடுதல் லாபம் பார்த்து வருபவர்களும் இருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தைச் சேர்ந்த கோவிந்தராஜனும் அவர்களில் ஒருவர். இவர், தனக்குச் சொந்தமான எண்ணெய் ஆலையில் வான்கோழி, நாட்டுக் கோழி, கின்னிக்கோழி ஆகியவற்றை வளர்த்து வருகிறார்!



ஆலையிலிருந்து, கோழி வளர்ப்புக்கு..!

''பத்தாவது வரை படிச்ச நான், அண்ணன்கூட சேர்ந்து எங்களோட எண்ணெய் மில்லு தொழிலைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன். 16 வருஷமா முழுநேரத் தொழில் இதுதான். இப்ப அஞ்சு வருஷத்துக்கு முன்ன விளையாட்டா கோழி வளர்ப்புல இறங்கினேன். இப்போ... அதுவும் எனக்கு ஒரு தொழிலா அமைஞ்சுடுச்சி.




ஒரு நாள், மில்லுல நான் இருந்தப்ப... ரோட்டுல 'ஒயிட் லெகான்’ கோழிக்குஞ்சுகளை வித்துக்கிட்டுப் போனாங்க. அதைப் பார்த்ததும், 'மில்லுலதான் நிறைய காலி இடம் கிடக்குதே... அதுல கோழிகளை வாங்கி விடலாம்'னு ஒரு யோசனை வந்துச்சி. உடனே, பத்து குஞ்சுகளை வாங்கி விட்டேன். அதுல நாலு செத்துப் போக, மீதி ஆறும் நல்லா வளர்ந்து வந்துச்சு. பெருசானதுக்கப்பறம் விலைக்குக் கொடுத்தப்ப... எண்ணூறு ரூபா கிடைச்சது. 'செலவே இல்லாம வளர்த்து... இவ்வளவு லாபமா!'னு நானே ஆச்சர்யப்பட்டுப் போனேன். அதிலிருந்துதான் கோழி வளர்க்கற ஆசையே வந்துச்சு.

நண்பர் தந்த ஊக்கம்!

வான்கோழிப் பண்ணை வெச்சிருக்கற நண்பர் ஒருத்தர்கிட்ட யோசனை கேட்டேன். 'தாராளமா இதுல இறங்கலாம்... நல்ல லாபம் பார்க்க முடியும்'னு சொல்லி ஊக்கப்படுத்தினார். பிறகு, புதுக்கோட்டையில இருக்கற கெவருமென்ட் கால்நடைப் பண்ணைக்கும் போய் சந்தேகங்கள தீர்த்துக்கிட்டேன். அவங்களோட யோசனைப்படி கொட்டகை போட்டேன். கரூர்ல இருந்து 100 வான்கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். மூணு கோழிங்க இறந்து போக, மத்ததெல்லாம் நல்லா வளர்ந்து வந்திச்சி.



மில்லுக்குப் பக்கத்துலயே இருக்கற 1 ஏக்கர் நிலத்துலதான் மேய்ச்சல். அதுல மீன்வலையைக் கட்டி பகல் நேரங்கள்ல மேய விட்டேன். அடர்தீவனம் தயாரிக்கறது பத்தி கால்நடைப் பண்ணையில சொல்லிக் கொடுத்திருந்தாங்க. அதேமாதிரி தீவனம் தயாரிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சதும்... வான்கோழிங்களோட வளர்ச்சி நல்லாவே இருந்துச்சி. தஞ்சாவூர், கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்துல கால்நடைகள், பறவைகளுக்கான மூலிகை வைத்தியம் பத்தி பயிற்சி எடுத்துக்கிட்டு, மூலிகைகளையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுவும் கோழிகளோட வளர்ச்சி சிறப்பா இருக்கறதுக்கு உதவுது.

பாம்பை விரட்டும், கின்னிக்கோழி!

ஒரு வருஷம் கழிச்சி, முட்டை வைக்க ஆரம்பிச்சதும் 100 குஞ்சுகள பொரிக்க வெச்சு, அதுகள மட்டும் வெச்சுக்கிட்டு... தாய்க்கோழி, சேவல் எல்லாத்தையும் வித்துட்டேன். மொத்தத்தையும் எடை போட்டு, கிலோ 140 ரூபாய்னு வித்ததுல 1,10,000 ரூபாய் வருமானம் கிடைச்சிது. கொட்டகை, மருந்து, தீவனம்னு எல்லா செலவும் போக... 34,000 ரூபாய் கையில நின்னுச்சு. 100 குஞ்சுகளும் மிச்சம். அப்படியே தொடர்ந்து வளர்க்க ஆரம்பிச்சுட்டேன்.



பண்ணையில பாம்பு நடமாட்டத்தைக் தடுக்க ரெண்டு கின்னிக்கோழி வாங்கி விட்டிருந்தேன். இந்த கோழிங்க எழுப்புற விநோதமான அதிர்வுல பாம்புக அந்தப் பக்கம் எட்டிகூடப் பார்க்காது. இப்போ கின்னிக்கோழிங்களும் பெருக ஆரம்பிச்சுடுச்சு. கூடவே, நாட்டுக் கோழிகளையும் வளர்க்க ஆரம்பிச்சேன். வழக்கமா தீபாவளி சமயத்துலதான் வான்கோழிக்குத் தேவை இருக்கும். ஆனா, நான் அப்படியெல்லாம் காத்திருந்து விக்கிறதில்ல. கல்யாணம், காதுகுத்து விசேஷம்னு கேட்டு வர்றவங்களுக்கு அப்படியே எடை போட்டு நாட்டுக் கோழியையும், வான்கோழியையும் வித்துக்கிட்டிருக்கேன். அதனால எனக்கு வருஷம் பூராவுமே வருமானம்தான்!

இப்போ வான்கோழியில பெருசு-70, குஞ்சுங்க-40; நாட்டுக் கோழியில பெருசு-20, குஞ்சுங்க-40; கின்னிக்கோழியில பெருசு-10, குஞ்சுங்க-30ங்கற கணக்குல இருக்கு'' என்ற கோவிந்தராஜன் வான்கோழி வளர்ப்பு முறை பற்றியும் விவரித்தார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம் உங்கள் பார்வைக்கு...

பறவைக்கேற்ற அளவுக்கு கொட்டகை!

''கொட்டகை அமைப்பதற்கு முன்னரே எவ்வளவு கோழிகளை வளர்க்கப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். வளர்ந்த வான்கோழி ஒன்றுக்கு 4 சதுரடி முதல் 5 சதுரடி வரை இடம் தேவை. நாட்டுக் கோழி மற்றும் கின்னிக்கோழிக்கு ஒன்றரை சதுரடி இடம் தேவை. இந்த அடிப்படையில் பறவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் கொட்டகையை அமைத்துக் கொள்ள வேண்டும். கொட்டகையைச் சுற்றி சிறிதளவுக்கு காலி இடம் இருப்பது நல்லது.

சுகாதாரம் முக்கியம்!

நேரடியாகக் கொட்டகைக்குள் மழையோ அல்லது வெயிலோ பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றைக் கொண்டு மேற்கூரை அமைத்துக் கொள்ளலாம். பக்கவாட்டு அடைப்புக்கு... கோழிவலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொட்டகையின் உள்தரையில் நான்கு அங்குல உயரத்துக்குக் கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். அதற்குப் பதிலாக தேங்காய் நார்க்கழிவு, நெல் உமி ஆகியவற்றைக்கூடப் பயன்படுத்தலாம். பிறகு, ஒன்றரை மாத அளவிலான குஞ்சுகளை வாங்கி விடலாம். கொட்டகையின் உட்சுவர்ப் பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளைத் தூவி விட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒருமுறை கடலைப்பொட்டு மாற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் கொட்டகை சுத்தமாக இருக்கும். கோழிகள் சுகாதாரமாக வளரும்.

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்!

கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். கொஞ்சம் மேய்ச்சல் முறையிலும் வளர்த்தால், செலவைக் குறைக்க முடியும். அதனால், இடவசதி இருப்பவர்கள் அங்கே மீன்வலை அல்லது கோழிவலை போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நாய், நரி போன்ற விலங்குகளிடம் இருந்து பறவைகளை காக்க இது உதவும். பகல் நேரங்களில் மட்டும் இதனுள் மேயவிட்டு, இரவில் கொட்டகைக்குள் விடலாம். மேய்ச்சல் நிலத்தில் ஆங்காங்கு சுத்தமான குடிநீர்ப் பானைகளை வைக்க வேண்டும்.



பழைய சாக்குகளை நீரில் நனைத்து, இரவு நேரத்தில் நிலத்தில் போட்டு வைத்தால், காலையில் அதனடியில் கரையான்கள் வந்து விடும். இவை கோழிகளுக்கு நல்ல உணவாகும். தவிர, மேய்ச்சல் நிலத்தில் உள்ள புழு, பூச்சிகள், பலவிதமானப் புற்கள் என்று சாப்பிடும்போது வான்கோழிகள் ஆரோக்கியமாக வளரும். தினமும் முருங்கைக் கீரைகளையும் கோழிகளுக்கு கொடுக்கலாம். அதேபோல தினமும் மூன்றுவேளை அடர்தீவனத்தையும் (பார்க்க, பெட்டிச் செய்தி) கொடுக்க வேண்டும். உணவகங்களில் கிடைக்கும் முட்டை ஓடுகளைப் பொடித்து அதையும் கொடுக்கலாம்.

5 பெட்டைக்கு 1 சேவல்!

வான்கோழிகளில் 5 பெட்டைக்கு ஒரு சேவல் இருப்பது போல, பராமரிக்க வேண்டும். இவை எட்டு மாதத்தில் பருவத்துக்கு வரும். முட்டையிடத் தொடங்கிய பிறகு, முப்பது மணி நேரத்துக்கு ஒரு முட்டை என தொடர்ந்து ஒரு பருவத்துக்கு 11 முட்டைகள் வரை இடும். மீண்டும் சிறிது நாட்கள் இடைவெளியில் முட்டையிடத் துவங்கும். வருடத்துக்கு சராசரியாக 80 முட்டைகள் வரை இடும். பொதுவாக இவற்றுக்கு அடைகாக்கும் பழக்கம் இல்லாததால், பொரிப்பான் மூலம்தான் குஞ்சு பொரிக்க வேண்டும். குஞ்சுகள் வெளிவர 28 நாட்கள் தேவை. வான்கோழிகளில் முதல் வருடம் கிடைக்கும் முட்டைகளில் மட்டும்தான் அதிக பொரிப்புத்திறன் இருக்கும். அதனால் இரண்டு வயது ஆன பெட்டைகளைக் கழித்துவிட வேண்டும்.

1 மாதம் வரை கதகதப்பு!

பிறந்த குஞ்சுகளுக்குச் செயற்கையாக ஒரு மாதம் வரையில் மின்சார பல்புகள் மூலம் கதகதப்புக்காக வெப்பம் கொடுக்க வேண்டும். வட்டமானக் கூண்டில் 15 முதல் 20 குஞ்சுகளை விட்டு, நடுவில் 60 வாட்ஸ் பல்பைத் தொங்கவிட வேண்டும். குஞ்சுகள் பல்பை விட்டு அகன்றால் அதிக வெப்பம் என்றும், பல்போடு ஒட்டி நின்றால், குறைவான வெப்பம் என்றும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பல்பு தொங்கும் உயரம், பல்பின் திறன் ஆகியவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். பிறந்து ஒரு வாரம் வரை மக்காச் சோளத்தூள் அல்லது பொட்டுக்கடலைத் தூள், அவித்த முட்டை ஆகியவற்றைக் கொடுக்கலாம். பின் கொஞ்சம் கொஞ்சமாக பசுந்தீவனம், அடர்தீவனம் ஆகியவற்றைக் கொடுத்துப் பழக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஒன்றரை மாத வயது வந்த பிறகு கொட்டகைக்குள் விட்டு விடலாம்.

நாட்டுக் கோழி ஆறு மாதத்தில் முட்டையிடத் துவங்கும். வருடத்துக்கு 80 முட்டைகள் வரை கிடைக்கும். வணிக ரீதியாக வளர்க்கும்போது பொரிப்பான் மூலம் பொரித்தால்தான் அதிக குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். குஞ்சுகள் வெளிவர 21 நாட்கள் ஆகும்.

இதேபோல கின்னிக்கோழி... ஏழாவது மாதத்துக்குப் பிறகு முட்டையிடத்துவங்கும். இது எங்காவது கண் காணாத இடத்தில்தான் முட்டைகளை இடும். அதனால் முட்டையிடும் பருவம் வந்தபிறகு அவற்றைக் கண்காணித்து புதர்களில் தேடி முட்டைகளை எடுத்து வர வேண்டும். வருடத்துக்கு 50 முட்டைகள் வரை கிடைக்கலாம். பொரிப்பதற்கு 28 நாட்கள் ஆகும். நாட்டுக் கோழி மற்றும் கின்னிக்கோழிக் குஞ்சுகளையும் வான்கோழிக் குஞ்சுகளைப் பராமரிப்பது போலவே பராமரிக்க வேண்டும். தீவனங்களும் அதேபோலக் கொடுத்தால் போதுமானது.’

நிறைவாகப் பேசிய கோவிந்தராஜன், ''ஆறு மாசத்துல ஒரு வான்கோழி 4 கிலோ எடை வந்துடும். சராசரியா வருஷத்துக்கு 900 கிலோ அளவுக்கு வான்கோழி விக்கிறேன். கிலோ 140 ரூபாய்க்கு போயிட்டுருக்கு. வளர்ப்புக்காக வருஷத்துக்கு 1,200 குஞ்சுகளையும் விக்கிறேன். ஒரு மாசக் குஞ்சு 120 ரூபாய் வரை விலை போகுது.

2 லட்சம் லாபம்!

நாட்டுக் கோழி ஆறு மாசத்துல ஒண்ணே முக்கால் கிலோ எடை வரும். இதோட விற்பனை வாய்ப்பு பத்தி சொல்லவே வேண்டியதில்ல. வந்து அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. நம்மால சப்ளை பண்ணத்தான் முடியாது. வருஷத்துக்கு சராசரியா 400 கிலோ அளவுக்கு நாட்டுக் கோழி விற்பனையாகுது. இதுவும் கிலோ 140 ரூபாய் வரைக்கும் போகுது.

கின்னிக்கோழியை பெரும்பாலும் வளக்குறதுக்காகத்தான் வாங்குவாங்க. வருஷத்துக்கு சராசரியா 250 குஞ்சுக விற்பனையாகுது. ஒரு மாசக் குஞ்சு

90 ரூபாய்னு விலைபோகுது. எப்படிப் பாத்தாலும், எல்லா செலவும் போக 2 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்'' என்றார், உற்சாகமாக.

மூலிகை மருந்து !



வான்கோழிகளை அம்மை மற்றும் சளி ஆகிய நோய்கள் அதிகமாகத் தாக்கும். சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றில் தலா 2 ஸ்பூன்கள், பூண்டு-5 , வெங்காயம்-4 ஆகியவற்றை லேசாகத் தண்ணீர் விட்டு அரைத்து, வாரம் ஒருமுறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால், இந்த நோய்கள் தாக்காது.

மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில்

200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, அதில் வான்கோழிகளின் தலை தவிர்த்து, மீதி உடலை முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வான்கோழிகளுக்கு, தோல் நோய்கள் வராது.

வசம்பு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். இதை,

5 லிட்டர் தண்ணீரில் கலந்து நாட்டுக்கோழிகள் மீது மாதம் ஒரு முறை தெளித்து வந்தால், அவற்றுக்கு செல் பிரச்னை வராது.



அடர்தீவன முறைகள்



ஏதாவது
ஒரு தானியம்
அல்லது கலந்த
தானியங்கள் : 30 கிலோ
கருவாட்டுத்தூள் : 5 கிலோ
தவிடு : 30 கிலோ
ஏதாவதொரு
பிண்ணாக்கு : 30 கிலோ
சோயா மாவு : 2 கிலோ
தாது உப்பு : 3 கிலோ



இவற்றை குருணைகுருணையாக அரைத்து, மொத்தமாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு நாட்டுக் கோழிக்கு தினமும் 50 கிராம், வான்கோழிக்கு 100 கிராம், கின்னிக்கோழிக்கு 75 கிராம் என்ற விகிதத்தில் கொடுக்க வேண்டும். இந்த அளவை மூன்று பாகமாகப் பிரித்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.. இவற்றுடன் பசுந்தீவனம், முட்டை ஒடு, காய்கறிக் கழிவுகள் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும். முட்டையிடும் கோழிகளுக்கு தனியாக கிளிஞ்சல் தூளையும் கொடுக்கலாம்.

தொடர்புக்கு: கோவிந்தராஜன், அலைபேசி: 93454-66455

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites