இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, March 22, 2012

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்


பத்தும் பத்தாமல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளியிலிருந்து, கைக்கும் வாய்க்குமே சம்பளம் சரியாக இருக்கிறது என அங்கலாய்க்கும் குமாஸ்தா முதற்கொண்டு, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் (அல்லது கிம்பளமாக) வாங்கும் கணவான்கள் வரை எல்லோருக்குமே, எந்தவொரு  தொழில்முனைவோரைப் பார்த்தாலும் சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும்!  

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லோருக்குமே போதை உண்டாக்கக் கூடிய காரணம் என்றால் அது 'முதலாளி' என்ற அந்த ஒற்றைவார்த்தைதான். எத்தனை லட்சங்களை மாத சம்பளமாக வாங்கினாலும் தொழிலாளிதான், ஆனால் மாதம் ரூபாய் பத்தாயிரம் நிகர லாபமாகசம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில் முனைவர் கூட 'முதலாளிதான்! குறைந்தது இரண்டு, மூன்று பேருக்காவது சம்பளம் கொடுப்பார், அவர் லீவ்போட்டால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு மாத சம்பளக்காரர், தொழில் முனைவோர்ஆக ஆசைப்படுவதற்கான காரணங்களை. 

உண்மை தான், ஆனால் வெளியில் பார்ப்பதற்கு முதலாளிப் பட்டம், சமூகத்தில் தொழிலதிபர் அந்தஸ்து, வங்கிகள் முதற்கொண்டு பல பொதுநிறுவனங்களிலும், மற்ற பொதுமக்களுக்கு இல்லாத முன்னுரிமை மற்றும் மரியாதை. அந்தந்த ஊர் பொது காரியங்களில் கௌரவம் மற்றும்தலைமை பொருப்பு... இப்படி பொதுமக்கள் பலரும் பொறாமைப்படக் கூடிய பல காரணிகளை தன்வசம் வைத்திருந்தாலும், சாதாரண சிறுவியாபாரியிலிருந்து, பெரிய குழுமங்களின் தலைவர்கள் வரையிலான பெரும்பான்மையான தொழில் முனைவோர்களுக்கு, ஒவ்வொரு நாளுமே சிவ ராத்திரி தான். 

அன்றைய பொழுதின் கடமைகளை எல்லாம் ஒருவாறாக முடித்து விட்டு, இரவு உறக்கத்திற்காக படுத்தவுடன் தான் அடுத்த நாள் அஜெண்டாவெல்லாம் பட்டியலாக கண்முன்னே நிற்கும். அனேகமாக எல்லா தொழில் முனைவோருக்குமே அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது, மறுநாள் தேதியில் கொடுக்கப் பட்டிருக்கும் வங்கிக் காசோலைகளாகத் தான் இருக்கும்! அடுத்ததாக இருப்பது ஒரு மாதமாகியும் நிலுவை பாக்கியை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள். இவர்கள் மட்டும் சரியான தேதிக்கு செட்டில் செய்திருந்தால்நாளை வரும் காசோலைகளைப் பற்றி என்ன கவலை?... என்று கேள்வி மனதில் எழும்போதே தூக்கம் கண்ணுக்கெட்டா தூரத்திற்கு சென்றிருக்கும். பட்டியலின் முதல் விஷயத்திற்கே இப்படி என்றால்
என்ன தொழில், எந்த மாதிரியான தொழில் என்பதை தேர்வு செய்ய வேண்டியது தான். என்ன தொழில்? - சரி, அது என்ன - எந்த மாதிரியான தொழில்? என்ன தொழில் என்பதை அவரவருக்கு உள்ள அனுபவத்தையோ அல்லது அத்தொழில் பற்றிய அறிவையோ அல்லது விருப்பத்தை பொருத்தது . அதைப் பின்னால் பார்ப்போம்

அதற்கு முன் எந்த மாதிரியான தொழில் என்பதைப் பார்ப்போம். தொழிலை உட்பிரிவுகளைத் தவிர்த்து பெறும் பிரிவுகளாகப் பிரித்தால் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. உற்பத்தி (Production), 2. சந்தைப்படுத்துதல் (Marketting), 3. வணிகம் அல்லது வியாபாரம் (Trading). 
இதில் வணிகம் அல்லது வியாபாரம் என்பது சந்தைப்படுத்துதலின் ஒரு உட்பிரிவாகத் தான் வரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் டிரேடிங் என்பது மிகப் பெரும்பான்மையானவர்களால் நடத்தப்படும் தனி தொழிலாக இருப்பதால் அதையும் ஒரு தனிப் பிரிவாக வைத்துவிட்டேன். இந்தப் பிரிவில் நம் தெரு முனையில் இருக்கும் சாதாரண சிறிய பெட்டிக் கடையிலிருந்து, போத்தீஸ், ஜோஸ் ஆலுக்காஸ் வரையிலும் அடைத்து விடலாம்.  

இந்த மூன்று பிரிவுகளையும், அதில் உள்ள கஷ்ட - நஷ்டங்களையும், அதை வெற்றி கொள்ளும் வழிமுறைகளையும் அடுத்தடுத்த பாகங்களில் விரிவாகப் பார்த்துவிட்டு, பிறகு என்னென்ன தொழில் செய்யலாம், அதற்கான வாய்ப்புகள எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக அலசுவோம்.முப்பெரும் தொழில் பிரிவுகளில் முதலில் வணிகம் அதாவது டிரேடிங் பற்றி இப்பொழுது பார்ப்போம். 

'கல் தோன்றி மண் தோன்றா காலத்து... மூத்த குடி' என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்த இயலாத நீ...ண்ட வரலாற்றுப் பின்னனிக்கு சொந்தக்காரர்களான நம் தமிழ் இனம், கிடைக்கப் பெற்றுள்ள வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலே, சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வாணிபத்தில்... அதிலும் கடல் கடந்த அண்டை நாடுகளிடையேயான வர்த்தகத்தில் சீனர்களுக்கு நிகராக ஈடுபட்டுக் கொண்டிருந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. 

அதனால் இயற்கையாகவே நம் தமிழர்களுக்கு பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வர்த்தகம், வணிகம் அல்லது டிரேடிங் (பங்குச் சந்தையில் உள்ள டிரேடிங் அல்ல) என்று அழைக்கப்படும் வினியோகத் தொழில் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒரு பாரம்பரியமிக்க தொழில் வகையாகும். 

வணிகம் என்பதை ஒரு பொருளை எடுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம். உதாரணத்திற்கு கடலை மிட்டாய் என்ற அனைவருக்கும் சுலபமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.  

இந்த கடலை மிட்டாயை உருண்டைகளாகவோ, சதுர அல்லது வட்ட வடிவ கேக்குகலாகவோ, ஏலக்காய் அல்லது நறுமணமூட்டப்பட்ட வகையினதாகவோ, சாதாரணமான ஜவ்வுதாள் என்று அழைக்கப்படும் பாலிதீன் பேக்கிங்கிலோ அல்லது கிரேவியர் பிரிண்ட் செய்யப்பட்ட லேமினேடட் பவுச் பேக்கிங்கிலோ... இப்படியாக நிறைய வகைகளில் அல்லது ஏதாவது ஒரு வகையில் உற்பத்தி செய்வது என்பது முதல் கட்டம். 

அடுத்து, இந்த கடலை மிட்டாய் என்பது 100 சதவிகித மக்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு உணவுப் பொருள். அதனால் பொருளைப் பற்றிய அறிமுகம் மக்களுக்கு தேவையில்லை. ஆனால் சந்தையில் ஏற்கனவே நிறைய போட்டியாளர்கள் இப்பிரிவில் களத்தில் இருக்கும் நிலையில், நம்முடைய நிறுவனம் தயாரிக்கும் கடலை மிட்டாய் வகைகளை ஒரு நாமகரணம் சூட்டி சந்தையில் ஒரு பங்களிப்பை (சதவிகிதத்தை) நமக்கென உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது இரண்டாம் கட்டம்.  

இறுதியாக, சந்தைப்படுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சதவிகித சந்தைப் பங்களிப்பைப் பெற்று, மக்களுக்கும் பரிச்சயமாகியிருக்கும் நம்முடைய நிறுவன கடலை மிட்டாய்களை ஒரு நாட்டில் ஆரம்பித்து, அதிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுக்காக்கள், நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கும் வேலை இருக்கிறதே அதுதான் வர்த்தகம் எனப்படும் வணிகம் அல்லது டிரேடிங் வகையைச் சார்ந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாகும். 

இப்பொழுது வர்த்தகம், வணிகம் அல்லது டிரேடிங் என்று அழைக்கப்படும் தொழில் வகை என்பது என்ன? அதில் உள்ள வாய்ப்பு என்பது எவ்வளவு நீ..ண்டது என்பது ஓரளவிற்கு புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். 

இந்த வர்த்தகப் பிரிவு தொழில் முறையை இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்ப்போம். உலகலாவிய நிலையில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரு பொருளை (உதாரணத்திற்கு பிஸ்கட் என்று வைத்துக் கொள்வோம்) உற்பத்தி செய்கிறது. சந்தைப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு நிறுவனம் அந்த பிஸ்கட்டை உலக அளவில் சந்தைப்படுத்தி இந்தியாவிலும் பட்டி தொட்டி வரை கொண்டு சேர்க்க களம் இறங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். 

இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது வர்த்தகத் துறையில் ஈடுபட நினைக்கும் ஒரு நிறுவனம் அல்லது தனிநபரின் வேலை. 

அந்தப் பொருள், இந்திய மக்களிடம் ஓரளவிற்கு விளம்பரம் மற்றும் பல வழிகளில் பரிச்சயமாக்கப் பட்டிருக்கிறது, அது சந்தைக்கு வந்து, தமக்கு அருகே உள்ள கடைகளில் கிடைக்குமாயின் ஒருமுறை வாங்கி உபயோகிக்கலாம், பிடித்திருந்தால் தொடர்வதைப் பற்றி யோசிப்போம் என்ற மனநிலைக்கு, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள், அதாவது ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர் வந்திருந்தாலே..., அப்பொருளை விநியோகம் செய்யும் நீநீநீ....ண்ட வாய்ப்புகளில் நம்முடைய கையிலிருக்கும் முதலீட்டிற்கு தகுந்தாற்போல் அதற்குண்டான இடத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டு ஒரு சுய தொழில் முனைவோராக மாறலாம்

அது என்ன நீநீநீ...ண்ட வாய்ப்புகள்? அதிலும் நம் கையிருப்பிற்கு தகுந்தாற் போன்ற இடத்தில் சேர்வது...? என்பதெல்லம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? அதையும் பார்த்து விடுவோம். 

அந்த உலகலாவிய சந்தைப்படுத்துதல் (Marketting Company) நிறுவனம், இந்தியாவில் நுழைய முடிவெடுத்த உடனேயே, இந்திய அளவில் அந்த பிஸ்கட்டை விநியோகம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, தங்கள் நிறுவனத்திற்கான, இந்தியாவின் C & F ஏஜெண்டாக அதாவதுClearing & Forwarding Agent ஆக நியமிப்பார்கள்.

இதில் எதிர்பார்க்கப்படும் வியாபாரம் அதிகம் என்றால், இந்தியச் சந்தையை இரண்டு அல்லது மூன்று மண்டலங்களாகப் பிரித்து தனித்தனியாகக் கூட நியமிப்பார்கள்.  இதுதான் முதல் வாய்ப்பு. இதிலிருந்து ஆரம்பமாகின்றன அடுத்தடுத்த எண்ணிலடங்கா வாய்ப்புகள். 

இதில் நம் கையிருப்புக்கு, அதாவது முதலீட்டிற்கு தகுந்தாற் போன்ற இடத்தில் இணைவது என்றால் என்ன?

உதாரணத்திற்கு இந்த பிஸ்கட் கம்பெனியின் ஆண்டு விற்பனை அளவு, இந்தியாவில் 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வருகிறது. அந்த ஒரு மாத சரக்கிற்கான தொகை மற்றும் மேலும் இரண்டு மாதங்களுக்கான முன்பணத்திற்கு பதிலாக வங்கி உத்திரவாதம் (Bank Guaranty) கொடுக்க வேண்டும். அதாவது 9 கோடி ரூபாய் ரொக்கமும், 18 கோடி ரூபாய்க்கான சொத்துப் பிணையமோ அல்லது ரொக்கமோ வங்கியில் வைத்திருக்க வேண்டும். சில சந்தைப் படுத்தும் நிறுவனங்கள் வைப்புத் தொகை கேட்பார்கள்
ஆனால் அதற்கு ஈடாக சரக்கை கடனாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இருப்பதால் நாம் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

மேலே கூறிய 27 கோடியும் முதல் நிலை முதலீடு. இதற்கும் மேல் ஒரு மாத சரக்கை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அளவிற்கான குடோன், மற்றும் நாடு முழுக்க அனுப்பும் பணிகளை நிர்வகிக்க குறைந்த பட்சம் 10 லிருந்து 20 பணியாளர்கள் வேலை பார்க்கக்கூடிய அளவிலான அலுவலகம் மற்றும் உபகரணங்கள், கட்டிட வாடகை, டெலிபோன், மின் கட்டணங்கள், ஊழியர் சம்பளம் இவையெல்லாம் போக, கட்டிடங்களுக்கான முன்பணம், தொழிலை சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளில் பதிவு செய்து கொள்வதற்கான கட்டணங்கள் மற்றும் ஃபார்மாலிட்டிகள்,  இத்தியாதிகள் என்று உத்தேசமாக இரண்டு கோடி ரூபாயும், மூன்று மாத செலவினங்களுக்கான  கையிருப்பாக ஒரு கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தமாக 30 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது இந்த முதல் வாய்ப்பில் நம்மை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான நமது முதலீடு! 

நம் கையில் 30 கோடி ரூபாய் இருக்கிறது என்றால், நாம் சுய தொழிலில் இறங்க இந்த முதல் வாய்ப்பிலேயே இணைந்து கொள்ள முயற்சிக்கலாம். இது படிப்படியாக பல நிலைகளைக் கடந்து, நம் கையில் வெறும் 25,000/- ரூபாய் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட, இதே விநியோக சங்கிலியின் கடைசி வளையமாகக் கூட நம்மை இணைத்துக் கொண்டு, "நானும் தொழில் முனைவோர் தான்" என்று கூறி நம்முடைய வளர்ச்சியின் முதல் படியில் காலை ஊன்றிவிடலாம்!


இந்த விநியோக சங்கிலி எப்படி ஒவ்வொரு நிலையாக இறங்கி நூற்றுக் கணக்கான புது தொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கின்றது
அது முடியும் தருவாயில், கோடிக்கணகில் பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்த டிரேடிங்வகையில் தொழில்முனைவோராக முடியுமா? என்ற ஐயம் வந்திருக்கும். அந்த ஐயம் படிப்பவர்களுக்கு (குறிப்பாக தொழில்முனைவோராகும்விருப்பத்துடன் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு) ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்திவிடும் என்பதால் தான் வெறும் 25,000/- ரூபாய் முதலீடாகவைத்திருப்பவர்கள் கூட இந்த விநியோகச் சங்கிலியின் கடைசி வளையமாக தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வரியில்எழுதியிருந்தேன். 

அது எந்தளவுக்கு சாத்தியம் என்று கூட சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனால் இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும் பொழுது, இந்தசந்தேகத்திற்கான விடை கிடைத்துவிடும். சரி இந்த விநியோகச் சங்கிலியின் முதல் வாய்ப்பில் இணைந்து கொள்ள் 30 கோடி ரூபாய் தேவைஎன்று பார்த்தோம். இதன் அடுத்தடுத்த நிலைகளையும் அதற்கு தேவைப்படும் முதலீடுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

இந்த கிளியரிங் & ஃபார்வேர்டிங் நிலைக்கு அடுத்த படியாக இருக்கும் நிலை இதான் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் எனப்படும், கிட்டத்தட்ட நேரடியாக,விற்பனைக் களத்தில் இறங்கும் தொழில் வாய்ப்பு. இப்பொழுது மார்கெட்டிங் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, இந்தியசந்தையைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் தவிர்த்து) குறைந்தபட்சம் ஒரு சூப்பர் ஸ்டாக்கிஸ்டையாவதுநியமித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் இது மூன்று அல்லது நான்கு மாநிலங்களுக்கு ஒன்று என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால்இப்பொழுது சந்தை விரிவடைந்திருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாகவோ, அல்லது சில கம்பெனிகள் ஒரே மாத்நிலத்திற்குமூன்று எஸ்.எஸ் கள் வரையிலோ நியமித்து பொருள் விநியோக நடைமுறையை மிகவும் விரைவாகச் செய்கிறார்கள்.  


ஆக இந்த பிஸ்கட் கம்பெனிக்கு இந்தியாவைப் பொருத்தவரை குறைந்தது முப்பது முதல் தொண்ணூறு வரையிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள்நியமிக்கப் படுகிறார்கள். நாம் தமிழகத்தில் இருக்கிறோம். இங்கு இந்த கம்பெனிக்கு இரண்டு எஸ்.எஸ். தேவைப்படுவாதாக் வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் ஒன்று சென்னையிலும் மற்றொன்றை மதுரை, திருச்சி அல்லது கோவையில் தான் அந்த கம்பெனி நியமிக்கும்.  

இந்த வரிசையில், தமிழகத்திற்கு கிடைக்கும் முதல் தொழில் வாய்ப்பு இந்த இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் தான். இதன் பிறகு தான்எண்ணிலடங்கா வாய்ப்புகள் வரவிருக்கின்றன. அதாவது இவர்களுக்கு கீழே, தமிழகம் முழுவதும் இந்த பொருளை விநியோகம் செய்யஒவ்வொரு நகரங்கள் வாயிலாக தனித்தனியாகவும், மாநகராட்சிகளைப் பொருத்தவரை நான்கிலிருந்து இருபது வரையிலும்டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனப்படும் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். அப்படிப் பார்த்தால் தமிழகம் முழுமைக்கும் இந்த கம்பெனிக்குகிட்டத்தட்ட 300 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.  


இந்த 300 பேரையும் தூரத்திற்கு தகுந்தாற்போல் இரண்டாகப் பிரித்து, இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் இவர்களுக்குப் பொருட்களை சப்ளைசெய்யும் பொருப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் செய்ய வேண்டிய வேலை என்ன? அதையும் கொஞ்சம் தெளிவாகப்பார்த்துவிடுவோம். 

இந்த டிஸ்ட்ரிபியூட்டர்கள் தான் ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் முதுகெலும்பே. அந்த நிறுவனத்தின் சி & எஃப் மற்றும் சூப்பர்ஸ்டாக்கிஸ்டுகள் எல்லோருடைய பணியும் பொருட்களை அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நின்று விடுகின்றது.ஆர்டர் எடுப்பது, பேமெண்ட் பற்றிய கவலை இதுவெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. ஆனால் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரோட வேலைஅப்படிப்பட்டதல்ல. கிட்டத்தட்ட End Users எனப்படும் உபயோகிப்பாளருக்கு முந்திய நிலையிலுள்ள கடைக்காரர்களிடம் பொருளைக் கொண்டுசேர்ப்பது என்ற மிக முக்கியமான பணி அவர்களுடையது. 


உதாரணத்திற்கு, விழுப்புரம் என்ற தமிழ்நாட்டின் ஒரு டிபிகல் நகரத்தை எடுத்துக் கொள்வோம். இந்த விழுப்புரத்திற்கு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர்நியமிக்கப்படுகிறார் என்றால், அவர் விழுப்புரம் நகரம் மற்றும் அதைச் சுற்றி பதினைந்திலிருந்து இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளகிராமங்களிலும் உள்ள பிஸ்கட் வைத்து விற்பனை செய்யக்கூடிய அனைத்து கடைகளுக்கும் இந்த பொருளை விற்பனை செய்து வசூல்செய்துகொள்ள வேண்டியது இவருடைய பொருப்பு. இவருக்கான இந்த ஏரியாவில் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதல், சிறிய பெட்டிக்கடைவரையிலான, ஏ, பி, சி, டி எனற நான்கு வகையான கடைகளையும் மொத்தமாகச் சேர்த்து 300 கடைகள் வரை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 300 கடைகளுக்கும் இவர் தான் சப்ளை செய்ய வேண்டும்.


இதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்படி அந்த விநியோகஸ்தர் இந்த மார்க்கெட்டிங் கம்பெனியின் முதுகெலும்பாகப் பார்க்கப் படுகிறார்? என்பதுதானே உங்கள் சந்தேகம். ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியின் சி & எஃப் சப்ளை செய்யும் எஸ்.எஸ் ஆகட்டும், அல்லது அந்த எஸ்.எஸ் கள் சப்ளைசெய்யும் நம் டிஸ்ட்ரிபியூட்டர்களாகட்டும், அனைவருமே, இந்த மார்க்கெட்டிங் கம்பெனியால் நியமிக்கப் பட்டிருப்பவர்கள். இந்தப் பொருளின்(பிஸ்கட்) விற்பனையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்த, முதலீடு செய்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்குள்ளே ஆர்டர் எடுப்பது,சப்ளை செய்வது, பணம் வாங்குவது எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் வரைமுறையோடு செயல்படும். அதில் ஓரிருவர் சரியில்லை என்றால்,அந்த மார்க்கெட்டிங் கம்பெனி அவர்களை நெறிப்படுத்திவிடும் அல்லது அவர்களை தூக்கியெரிந்துவிட்டு வேறொருவரை அந்த இடத்தில்நியமித்துவிடும். 


ஆனால் நம்முடைய விநியோகஸ்தர்கள் சப்ளை செய்யும் கடைக்காரர்கள் அதாவது அவர்களுடைய கஸ்டமர்கள் அப்படியல்ல. அவர்கள் இந்தநிறுவனம் தயார் செய்யும் பிஸ்கட்டை தன் கடையில் வைக்க வேண்டாம் என்று நினைத்தால், இதை வாங்க மாட்டார்கள். மற்ற பிராண்டுகளில்உள்ளதை வைத்துக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி விடுவார்கள். இதில் கடைக்காரர்களை கட்டுப்படுத்தவும்வழியிருக்கிறது, அதை சந்தைப்படுத்துதல் (Marketting) பற்றி எழுதும் போது விரிவாக அலசலாம். ஆனாலும் வாடிக்கையாளர்கள் தவிர்த்து,சப்ளையர்கள் அனைவருமே கடைக்காரர்களிடம் அனுசரித்துப் போக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று தான். 


எனவே நமது விநியோகஸ்தர், தங்களது பிராண்ட் பிஸ்கட்டுகளை இந்த 300 கடைகளிலும் வைப்பதற்குள் (Placement) தாவு தீர்ந்துவிடும்.முதலில் இரண்டு மூன்று முறை அலையவிட்டு, அதன் பிறகும் விடாது கருப்பாக தொடர்ந்து வந்தால், சரி.. வைத்து விட்டுப் போங்கள்,விற்றால் காசு இல்லையென்றால் சரக்கை திரும்ப எடுத்துக்கனும் ஓக்கேவா? என்று ஒற்றை வரியில் கேள்வி வரும். இதற்காகவே தவம்கிடந்தது போன்று நம் 'விநி' யும் சரிங்ணா..! என்று பவ்யம் காட்டி சரக்கை அந்தக் கடையில் அடுக்கிவிடுவார். இப்படியே தொடர்ந்து சென்று ஒரு150 கடைகளில் பிளேஸ்மெண்ட் வாங்கிவிட்டாலே, ஓரளவிற்கு இந்த துறையில் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார் என்று தான்அர்த்தம். 


நாம் ஏற்கனவே கூறியிருந்த படி இந்த மார்க்கெட்டிங் கம்பெனி நம் பிஸ்கட்டை ஓரளவிற்கு விளம்பரங்களின் மூலம் பிரபலமாக்கி,உபயோகிப்பாளர்களில் சிலரை ஒரு முறையேனும் வாங்கி உபயோகிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்திருந்தும், கடைகளில் பிளேஸ்மெண்ட்வாங்க, மார்க்கெட்டிங் கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகளும், நம் விநியோகஸ்தரும், தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்.  


இந்த விற்பனை செய்வதின் சிரமங்களைக் கூட, அந்த மார்க்கெட்டிங் கம்பெனியும் அதன் விற்பனை பிரதிநிதிகளும் பொறுப்பெடுத்துக் கொண்டுசெய்து கொடுப்பார்கள். அது அவர்களுடைய கடமையும் கூட. ஆனால் பொருட்களை கடைகளுக்கு கொடுத்து, அதற்கான பணத்தை வசூல்செய்து, 300 கடைகளுக்கும் தேவையான சரக்குகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருந்து... இந்த சுழற்சி விட்டுப் போகாமல் சுழலச் செய்வதுதான் நம்முடைய விநியோகஸ்தர் என்ற தொழில் முனைவோருக்கான பொருப்பு. 


ஒரு பெட்டிக் கடையில் 50 ரூபாய்க்கு பொருளை சப்ளை செய்துவிட்டு, அதை பத்து பத்து ரூபாயாக வசூல் செய்வதற்குள்.... அடுத்த 50 ரூபாய்க்கு அந்த கடைக்காரர் ஆர்டர் கொடுத்து விடுவார். சரி இவ்வளவு மோசமாக பேமெண்ட் செய்யும் இந்த கடையை விட்டு விடலாம் என்றால், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பிஸ்கட் கிடைக்காமல் போய்விடும். மேலும் இதேப்போன்று பிரச்சினைகள் உள்ள கடைகளை எல்லாம் தவிர்த்துவிட்டால், சேல்ஸ் பாதித்துவிடும். இப்படி பல சங்கடங்களை சமாளித்து தொழில் செய்யும் நம் விநியோகஸ்தருக்கு முதுகெலும்பு பட்டம் சரி தானே? 


தற்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும், இந்திய சந்தையில் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல் ஆகும் ஒரு பிஸ்கட் கம்பெனிக்கு, தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆக வேண்டும் என்றால் 50 லட்சமும், அல்லது ஏதாவது ஒரு தமிழக நகரத்திற்கான விநியோக உரிமை பெற்று தொழில்முனைவோராக வேண்டும் என்றால் ரூபாய் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தாலே போதும், அவர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு அறையை மட்டும் இதற்காக ஒதுக்கிக் கொண்டு தொழில்முனைவோராகிவிடலாம்! 

ஒரே குழப்பமாக இருக்கிறதே? இவ்வளவு குறைந்த முதலீடு தானா? அதுவும் நம்ப முடியவில்லையே?

சரி இவ்வளவு குறைவான முதலீடு என்றால் லாபம் எவ்வளவு கிடைக்கும்? அந்த லாபத்தில் குறைந்த பட்சம் ஒருவரின் மூன்று வேளை சாப்பாட்டிற்காவது மிஞ்சுமா? என்றெல்லாம் நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.!... நியாயம்தான். ஆனால் இந்த குழப்பங்களும், சந்தேகங்களும் தவிடுபொடியாகி, உற்சாகத்துடன் இந்தத் தொழிலையே செய்யலாமே என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் அடுத்த பாகத்தை படித்து முடித்தவுடன்! 


 அது வரை கொஞ்சம் பொருத்திருங்கள். சில உள் விவகாரங்களைப் பற்றி அலசியதால், இந்த பாகம் சிலருக்கு விறுவிறுப்பாக கூட இல்லாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராவதற்கான சவாலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!

Rcvd by mail thnxs brother

4 comments:

Dear Mr.Fakrudeen

ASWB

This article is very enthusiastic to the new entrepreneur and want to read remaining, pls give me the source of this article to entmnt123 at gmail dot com

Maa salam

Mohideen
Dammam

தாங்கள் வருகைக்கு நன்றி ஊக்குவித்தமைக்கும் நன்றி

தாங்கள் வருகைக்கு நன்றி திரு மனோகர் அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites