இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 5, 2012

மீன்களின் எடையை அதிகரிக்கும் அசோலா

மூன்றே மாதத்தில் மீன்களின் எடையை முக்கால்கிலோ அதிகரிக்கும்        அசோலா.
அரை ஏக்கரில் மீன்குளம் அமைத்து, இயற்கை உணவுகளான வாழை இலை, அசோலா புல்லினை பயன்படுத்தி, 10 மாதத்தில் ரூ.75 ஆயிரம் பெறுவதாகக் கூறுகிறார் அனுபவ மீன்வளர்ப்பு விவசாயி மனோகரன், தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்.
          மீன்களுக்கு, தான் வகுத்திருக்கும் உணவு வகை பற்றி விவசாயி தெரிவிக்கிறார்.
          அரை ஏக்கர் நிலத்தில் ஐந்தரை அடி ஆழத்திற்கு குளத்தை வெட்டி அமைத்திருக்கிறார். அதில் 100 கிலோ கிளிஞ்சல் தூளைப் போட்டு 5 அடி உயரத்திற்கு தண்ணீர்விட்டு பிறகு 200 கிலோ ஈர சாணத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து பரவலாக ஊற்றியுள்ளார்.
             பின்பு 15 நாட்கள் கழித்து மீன் குஞ்சுகளை விட்டுள்ளார்.
             இரண்டரை அங்குலம் நீளம் கொண்ட மீன் குஞ்சுகளை ஒரத்தநாடு பகுதியில் இருக்கும் மீன் பண்ணையில் ஒன்று ஒரு ரூபாய் என்ற விலைக்கு வாங்கிவந்து, 100 கட்லா, 100 புல்கெண்டை, 250 மிர்கால், 250 ரோகு ஆகமொத்தம் 700 மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டுள்ளார்.
            பின் படிப்படியாக  அதிகரித்து அதிகபட்சமாக 1000 குஞ்சுகள் மட்டுமே இருக்கிற மாதிரி பராமரிக்கிறார்.
            எண்ணெய் நீக்கிய தவிடு 60 சதம், கோதுமை மாவு 5 சதம், சோயா 5 சதம், சோளம் 15 சதம், கடலைப்புண்ணாக்கு 15 சதம் என்ற அளவில் கலந்து முதல் ஒரு மாதம் வரை தினமும் 2 கிலோ தீவனம் கொடுத்துள்ளார்.
         இரண்டாவது மாதம் 5 கிலோ தீவனமும்,
         3வது மாதத்தில் இருந்து 7 கிலோ தீவனமும் கொடுத்துவருகிறார்.
         குஞ்சுகளை விட்ட முதல் 2 நாள் வரைக்கும்தான் தீவனத்தைக் குளத்திலே தூவிவிட்டார்.
         அதற்கு பிறகு குளத்தின் இரண்டு கரையிலும் ஒரு கம்பை ஊன்றி கயிற்றைக் கட்டி, அதில் 10 அடிக்கு ஒரு நைலான் பைப்பை தண்ணீருக்குள் தொங்கவிட்டு (ஊசி முனை நுழையும் அளவிற்கு அந்த பையில் துளைகள் இருக்கும்) அதில் தீவனத்தைப் போட்டு நன்றாகக் கட்டிவிடுவார்.
            மீன்குஞ்சுகள் பையில் முட்டி மோதும்போது தீவனம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும். அதை மீன்கள் சாப்பிடும்.
          முதல் முறை பை நிறைய தீவனத்தை வைக்க வேண்டும்.
          அடுத்த நாள் மீதமிருக்கும் தீவனத்தை வெளியில் கொட்டிவிட வேண்டும்.    
          மீன் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டும் அடுத்தமுறை தீவனத்தை வைத்தால் போதும்.
          குஞ்சு விட்டதிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை 200 கிலோ சாணத்தை கட்டி இல்லாமல் தண்ணீரில் கரைந்து குளத்திலேயே ஊற்றுவார்.
          குஞ்சுவிட்ட 30 நாளில் இருந்து தினமும் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அசோலாவைப் பரவலாக குளத்தில் தூவிவிடுகிறார்.
          40ம் நாளில் இருந்து தினமும் 10 வாழை இலைகளையும், 10 கிலோ புல், களை இவையெல்லாம் நறுக்கி பரவலாக குளத்திலேயே போடுகிறார். இதனால் மீன்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது என்கிறார் விவசாயி.
            குளத்தில் நீர்மட்டம் எப்போதும் 5 அடி இருக்கிற மாதிரி பராமரிக்கிறார்.      
            முதல் முறையாக 90ம் நாள் 100 கட்லா பிடித்துள்ளார். ஒவ்வொன்றும் சராசரியாக 150 கிராம் எடை இருந்தது.
            30 புல் கெண்டை பிடித்துள்ளார். சராசரியாக 700 கிராம் எடை இருந்துள்ளது.
            எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 70 கிலோ மீன் கிடைத்துள்ளது.
            மறுநாள் 200 கட்லா குஞ்சுகளையும் 100 புலிகெண்டை குஞ்சுகளையும் குளத்தில் விட்டுள்ளார்.
           இப்படி ஒவ்வொரு முறை மீன்பிடிக்கும்போது புதிதாக குஞ்சுகளை விட்டுவிட்டு அடுத்த 90 நாளில் அதை பிடித்து விற்பார்.
            சராசரியாக ஒரு கிலோ ரூபாய் 90க்கு விற்பனை செய்கிறார்.
          இப்படி இயற்கை முறையிலேயே மீன் வளர்த்து பத்து மாதத்தில் சுமார் ஒரு லட்சம் அளவிலும் வருமானம் கிடைக்கிறது.
           செலவு போக நிகர லாபமாக 75,000 ரூபாய் கிடைக்கும் என்கிறார் மீன்வளர்ப்பு விவசாயி மனோகரன்.
தொடர்புக்கு: மனோகரன், 98651 44690. (தகவல்: பசுமை விகடன், 10.4.10)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites